பூமணியின் கலைப்பார்வை
இவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாகவேண்டிய படைப்பாளி .நீல பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன்வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது .பூமணி தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப்பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர் ] ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப்பட்ட எந்த புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன்வைக்கவில்லை .கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை . இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான் .கன்னட மொழியிலும் மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகுதான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல்க் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார் ,தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர் ] மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப் படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும் , அதற்கு படைப்பின் அந்தரங்க தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாகமிருக்காது என்று உணர்ந்தவர்.தலமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வா தியிடம் ,அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும்கூட , தந்துவிட முன்வராதவர்.
அவரது படைப்புகள் எந்த புறக்குரலையும் பிரதிபலிக்கும் வேலையை செய்யவில்லை. ஆகவே தான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும்படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரை பொருட்படுத்தவில்லை .அவர்கள் ஒருவேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்க பூமணி முன்வரவுமில்லை.முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன்வைத்தார் .அதற்கு மேல் விழும் எந்த டையாளமும் தன் படைப்பை குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். ' 'அழ கிய லுக்குப் பதிலாக அரசியலை ' ' முன்வைக்கும் குரல்கள் எழுந்த காலகட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாக பூமணி இருந்தார். தமிழில் அந்த ' அரசியல் ' இலக்கியவெற்றி பெறவில்லை ,பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீபகால வரலாறு
நன்றி: திண்ணை
No comments:
Post a Comment