பூமணியின் படைப்புகள்
பூமணியின் படைப்புகளை முன்வைத்து விரிவான விவாதத்துக்கு இங்கு முற்படவில்லை.இக்கட்டுரை அனேகமாக வெளிநாட்டு வாசகர்களை முன்கண்டு எழுதப்படுவது.பூமணியின் படைப்புகளை தமிழின் இயல்புவாத படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல்கட்டமென்றால் அவரது தனித்தன்மைகள் மூலம் அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து அவர் விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம்கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்தகட்டமாகும்.எந்த முதன்மைப்படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாக பொருந்திப் போகமாட்டான் .காரணம் அழகியல் இயக்கங்கள் காலகட்டம் சார்ந்தவை ,படைப்பு நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காலம் சார்ந்தது.
' பிறகு ' பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதில் விமர்சகர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை.அதேபோல படைப்பூக்கம் சற்றும் திரளாமல் போன படைப்பு ' நைவேத்யம் ' என்பதிலும் . அதே சமயம் நைவேத்யம் ஒரு முக்கியமான விஷயத்தை பறைசாற்றுகிறது . படைப்பாளிக்கு சூழல் சித்தரிப்பும் சரி ,சமூகச் சித்தரிப்பும் சரி படைப்பின் புற அம்சங்களே. படைப்பை ' நம்பவைத்தலுக்கும் ' படைப்புக்கு தேவையான படிமங்களை உருவாக்கவும் தான் அது பயன்படுகிறது .கரிசல் காட்டுக் கிராமத்துக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை அக்கரிசல் காட்டுக் கிராமத்தில் படைப்பாளியின் மனம் பெரிதும் கலந்திருப்பதனால் அது அகப்படிமங்களாகும்போது உயிர்ப்பு அதிகம் அவ்வளவுதான் . தனக்கு பழகிப்போன அருந்ததிய சாதி சார்ந்த வாழ்வில் இருந்தும் , கரிசல் நிலத்திலிருந்தும் பூமணி விலகி பிராமண வாழ்வைப்பின்புலமாகக் கொண்டு இந்நாவலை எழுதியது அவரது தன்னம்பிக்கையையும் ,புதிய தடங்களை நோக்கி செல்வதற்கான அடிப்படையான துடிப்பையும் தான் காட்டுகிறது .அத்துடன் அச்சாதி மற்றும் நிலப்பின்னணியை தன் இலக்கிய ஆக்கத்தின் ஆதாரமாக அவர் எண்ணவில்லை என்பதற்கும் அது சான்று.
ஆனால் தனக்கு ஆழ்மன அறிமுகம் இல்லாத பிராந்தியத்தில் படைப்பாளியின் மனம் எதையுமே கண்டடையாது என்பதற்குச் சான்றாக அமைந்தது நைவேத்யம் பூமணிக்கு பின்னால் வந்த படைப்பாளிகள் தங்கள் சாதி ,நிலச் சூழலுடன் தங்களுக்கு இருந்த அடிப்படை உறவை வலியுறுத்தினார்கள் . தாங்கள் எழுதுவது அந்த சமூக , நிலப் பகுதியின் ' அப்பட்டமான ' வாழ்க்கையை என்று நம்பி சொல்லவும் செய்தார்கள்.அந்த நம்பிக்கை இயல்புவாத எழுத்தில் எப்போதும் காணப்படுவது .பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான்.அவர் மன அளவில் இயல்புவாதத்தை ஏற்றுக் கொண்டவரல்ல .தன் சித்தரிப்புகளை அப்பட்டமாக செய்யும்போதேகூட அவர் அதை ஒரு புனைவு உத்தி என அறிந்துமிருந்தார் .
'பிறகு ' நாவலின் அழகிரி தமிழின் மிக முக்கியமான முன்னோடிக் கதாபாத்திரம் .தமிழ் நாவல்களில் ஆண் பெண் வடிவில் அழகிரிப்பகடை இப்போது பலமுறை மறுபிறவி எடுத்துவிட்டார். [இமையத்தின் ஆரோக்கியம் ,தருமனின் மாடத்தி ஈறாக] ' பிறகு ' நாவலின் ஒரு நீட்சியே பெருமாள் முருகனின் கூளமாதாரி [ இவ்விரு நாவல்களை புரிந்துகொள்ள முக்கியமாக உதவக் கூடியது மாற்கு எழுதிய ' அருந்ததியர் வாழும் வரலாறு ' என்ற ஆய்வு நூல் ] சமூகத்தால் இழிந்த நிலையில் கடைப்படியாக கருதப்படும் ஒரு குலத்தில் , சகல அழுக்குகளுக்கும் இருட்டுகளுக்கும் இழிவுகளுக்கும் நடுவே பிறந்து முழு வாழ்க்கையையும் கழிக்கும் அழகிரிப்பகடையில் குடிகொள்ளும் ஆழமான மானுட நேயமும் ,வாழ்க்கை குறித்த புரிதலும் , சமநிலையும் நிதானமும் வாசகனை மிக ஆழமான மறு பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்கிறது.ஒரு சராசரித்தமிழ் மனம் அழகிரியை 'சான்றோர் ' என்று ஏற்றுக் கொள்ளாது. [சில நற்குணங்களை அது அவரிடம் அடையாளம் கண்டுகொள்ளலாம் ,அது வேறுவிஷயம் ] ஆனால் அழகிரிப்பகடை அச்சமூகமனம் எவற்றை உயர்ந்த விழுமிங்களாகக் காண்கிறதோ அந்த அம்சங்களெல்லாம் நிரம்பிய கதாபாத்திரம். அதே சமயம் அது நா பார்த்தசாரதியின் பாணியில் செதுக்கப்பட்ட ஓர் ' அச்சு இலட்சியவாத ' கதாபாத்திரமல்ல .இங்குதான் பூமணியின் அப்பட்டமான இயல்புவாதம் அவருக்கு கைகொடுக்கிறது. அழகிரிபகடை ' எது மேலான வாழ்க்கையின் இலக்கணம் ' என்ற வினாவை மிக ஆழமாக எழுப்பிவிடுகிறார் .
'பிறகு' ஒரு வரலாற்று நாவலும் கூட. நூறு வருட காலகட்டத்தில் இந்த அருந்ததிய வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் [அல்லது வேறு ஒரு கோணத்தில் மாறுதலின்மைகள் ] இந்நாவலில் கூறப்படுகின்றன.அழகிரிப் பகடையின் சாதாரண வாழ்க்கையை மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகள் வழியாக பூமணி சித்தரிக்கிறார் .பலவகையிலும் இதனுடன் ஒப்பிடக்கூடிய நாவலான சினுவா ஆச்சிபி யின் ' சிதைவுகள் ' [Things fall apart ] இதனுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணாமான ஒரு படைப்பே .காரணம் ஆச்சிபி என்ற [மேற்கத்தியக் கண் கொண்ட] சித்தரிப்பாளர் அக்கதையைச் சொல்வது அந்நாவலில் அடிக்கடி வெளித்தெரிகிறது .குறிப்பாக அந்நாவலில் கதையில் வரும் முக்கியமான கால இடைவெளி ஒரு புனைவுத் தோல்வியே ஆகும். வரலாறு ஒரு கதையாக மாற்றப்படும் விதம் பொம்மலாட்டக் காரனின் விரல்கள் போல அங்கு வெளியே தெரிகிறது.மாறாக 'பிறகு ' காலம் போலவே நகர்வு தெரியாமல் நகர்கிறது.மிகவும் சகஜமாக ,மிகவும் நுட்பமாக ,அதே சமயம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும் கூட!இந்த முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாகவே பூமணியின் நடையும் சித்தரிப்பும் மிக மிக நிதானம் மிக்கவையாக , சமநிலை கொண்டவையாக காணப்படுகின்றன.
'பிறகு' வை முன்வைத்து இயல்புவாதத்துக்கும் பூமணிக்கும் உள்ள உறவை மேலும் ஆராயலாம். இயல்புவாதத்தின் அப்பட்டமான மானுட யதார்த்தத்தை ' பிறகு ' தவிர்த்துவிடும் இடம் எது ? அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும் ,சாராம்சப் படுத்தும் குரலும் தவிர்க்கப் பட்டுள்ளன .அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதை தான் ' பிறகு ' இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை --இயல்புவாதமேயானாலும் !ஆக இயல்புவாதத்தின் அடிப்படையான தத்துவத்தை பூமணிீ ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதலாம் .மனித வாழ்க்கையும் ,வரலாறும் , மனமும் ஆழத்தில் இருள் நிரம்பியவை என்ற நம்பிக்கை இயல்புவாதத்தின் ஆதாரம்.[ஃப்ராய்டிய உளப்பகுப்புடன் இதற்குள்ள உறவு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது] அந்த இருளை எந்த பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாகக் காட்டவே அது முயன்றது. பூமணிீயி ன் இீயல்புவாதம் அப்பக்கமே போகவில்லை. அது இயல்புவாதத்திடமிருந்து பெற்றுக் கொண்டது விமரிசன நோக்கமற்ற சித்தரிப்பும் , சமநிலை கொண்ட வடிவத்தையும் மட்டுமே என்று சொல்லலாம்.
'வெக்கை ' தமிழில் நவீனத்துவப் படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட காலத்தில் வெளிவந்தது . புகழ் பெற்ற நவீனத்துவ நாவல்களுடன் இதற்கு வடிவம் மொழி ஆகிய இரு தளங்களிலும் நெருக்கமான தொடர்பு உண்டு. எதிரியின் கையை வெட்டிவிட்டு ஓடும் சிறுவனாகிய கதாநாயகனின் சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல் . அவனது ஓட்டத்தை ஒரு குறியீட்டுத்தளத்திற்கு நகர்த்துவதிலும் நவீனத்துவ நாவல்களின் பாதிப்பு அதிகம். ஆனால் இந்நாவலும் அழகிய இயல்புவாத நாவலேயாகும்.சித்தரிப்பில் எந்த இடத்திலும் சமூகவியல் நிலவியல் நம்பகத் தன்மையை இது இழக்கவில்லை. இதன் பாதிப்பு அதன் செய்தியறிக்கைப் பாணிமூலமே நடைபெறுகிறது . இதை ஒரு நவீனத்துவ நாவலாகாது தடுக்கும் அம்சம் இதிலுள்ள இனவரைவியல் கூறுதான்.இது அடையாளம் இல்லாத 'ஒரு மனிதனின் ' கதை அல்ல .மானுடத்தின் உருவகக் கதையுமல்ல. இன இட அடயாளம் காரணமாக இது மெதுவாக வீரகதைகளின் எல்லைக்குள் சென்றுவிடுகிறது. அதே சமயம் இது அத்தகைய கதைகளுக்குரிய மிகை நோக்கிச் செல்லாமல் தன் இயல்புவாத அம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டுமுள்ளது.இயல்புவாதத்திலிருந்து நவீனத்துவம் நோக்கிய ஒரு மெல்லிய நகர்வே இந்நாவலாகும்.
பூமணியின் சிறுகதைகளும் நவீனத்துவ அழகியல் வடிவ நேர்த்தியை இயல்புவாத தன்மையுடன் அடைய முயல்பவை என்று சொல்லலாம். ரீதி தொகுப்பில் உள்ள கதைகளை ஒருவர் எளிய நேரடியான வாழ்க்கைத்துளிகளாக எடுத்துக் கொள்ளலாம் அவற்றை பின்னணியான சமூகச் சித்திரத்துடன் பொருத்திப் பார்க்கையில் அவை விரிவடைந்த படியே போவதைக் காணலாம். ரீதியும் ராஜேந்திர சோழனின் எட்டுகதைகள்' என்ற தொகுப்பும் முறையே இயல்புவாதத்துக்கும் ,விமரிசன யதார்த்தவாதத்துக்கும் உச்ச உதாரணங்களாக அவை வெளிவந்த காலத்தில் கருதப்பட்டன.
நன்றி: திண்ணை
No comments:
Post a Comment