Saturday, 18 August 2012

பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன் பாகம் - 4


பூமணியின் எல்லைகள்

தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிழைகளிடன் ,அ த்துமீறியுருப்பதைக் காணமுடியும். உதாரணமாக மகா ஸ்வேதா தேவி யின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் [செம்மீன் தவிர்த்த] படைப்புகளையோ பார்க்கலாம் .தமிழ் நவீனத்துவத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக தமிழ் விமரிசன யதார்த்தவாதப் படைப்புகள் கூட கச்சிதமான வடிவத்தை அடைந்துள்ளன.[விதிவிலக்கு பொன்னீலனின் புதிய தரிசனங்கள். ஆனால் அதுவே அவ்வகை நாவலகளில் முதன்மையானது.காரணம் விமரிசன வாதம் என்பது அக்கண்ணோட்டம் முழுமையாக முன்வைக்கப் படும்போதே மதிப்புக்குரியதாகிறது] .

தமிழின் இயல்புவாதப் படைப்புகள் எல்லாமே மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம். முதல் உதாரணமான 'நாகம்மாள் ' கூட அப்படிப்பட்ட கச்சிதமான ஒரு படைப்புதான். கலைப் பிறழ்வுகளை இங்கு சுட்டவில்லை.பூமணியின் நாவல்கள் இயல்பாகவே கச்சிதமானவை--நைவேத்யம் கூட.அவற்றின் முக்கியமான பிரச்சினையே அவற்றின் அப்பட்டமான இயல்புவாதத் தன்மைதான்.கனவுகளுக்கோ நெகிழ்வுகளுக்கோ இடமற்ற 'வரண்ட ' இப்பரப்பில் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே இடம் பெற முடிகிறது.ஆழ்நிலைகளை இது ஐயப்படுகிறது .புறவய யதார்த்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது.உதாரணமாக பூமணி பேசும் மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் சடங்குகள் ஆகியவை அவர்களின் அகம் வெளிப்படும் முக்கியமான ஊடகங்களாகும்.[பார்க்க அருந்ததியர் வழும் வரலாறு] ஆனால் பூமணி இந்த தளத்தை முற்றிலுமே தவிர்த்து விட்டிருக்கிறார்.அவை வெறும் நிகழ்ச்சிகளாக ,தகவல்களாக மட்டுமே அவருடைய படைப்புலகில் தெரிகின்றன.இதன் மூலம் வெளியே தள்ளப்படும் ஆழத்தில் தான் இம்மக்களின் சமூக ,அந்தரங்க பழக்கவழக்கங்களின், நம்பிக்கைகளின் ஊற்றுக் கண் இருக்க முடியும்.

பலவகையிலும் உளவியல்பூர்வமாக அடக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தரப்பை நுட்பமான இடக்கரக்கல்கள் மூலமும் , குறியீடுகள் மூலமும் மறை முகமாக இந்த ஐதீக, புராணிகங்களில் பதிவு செய்துள்னர் .அவ்வம்சங்கள் தவிர்க்கப் பட்டதும் ஓர் முக்கியமான அகத்தளம் விடுபடுகிறது .இவ்வம்சத்தை முழுமைப்படுத்தவே பிற்பாடு வந்த மிகுபுனைவுசார்ந்த , மீமெய்வாத [fantacy &surrealism ] படைப்பாளிகள் முயன்றனர்.ஒரு உதாரணம் கூறலாம் .பூமணியின் 'வெக்கை ' கதையின் அகவய நீட்சியே கோணங்கியின் ' கருப்பன் போன பாதை ' என்ற முக்கியமான கதை. பூமணியின் கதையில் ஆண்டையை வெட்டியபிறகு ஓடும் பகடையின் ரத்தம் பரவிய ஆடைகளும் ,அரிவளும் யதார்த்தமாக சித்தரிக்கப் படுகையில் கோணங்கியின் கதையில் அவை குறியீடுகளாக மாறி , தலைமுறை தலைமுறையாக உலராத ரத்தத்துடன் அக்குடிகளிடம் எஞ்சுகிறது. இக்கதையை தான் பூமணியின் கதையின் தொடர்ச்சியாகவே உருவகிப்பதாக அதை எழுதுவதற்கு முன்பே கோணங்கி என்னிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த ரத்தம் எளிதில் உலராதது ,அதை கழுவ முடியாது என்று அவர் சொன்னார் .இக்கதை நாட்டார் /வாய்மொழிக் கதைகளின் புராணிக /ஐதீக அம்சத்தை சேர்த்துக் கொண்டு பூமணி தொடாத அடுத்த இடத்தைத் தொடுவது முக்கியமானது.

பூமணியின் படைப்புலகில் உள்ள அடுத்த இடைவெளி அதன் இயல்புவாதப் பண்பு காரணமாக அது அங்கத அம்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டிருக்கிறது என்பதே. அருந்ததியர் போன்ற அடித்தள மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் அங்கதம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கசப்பை ,கோபத்தை,ஏமாற்றத்தை ,ஆங்காரத்தை எல்லாம் இம்மக்கள் அங்கதமாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களிடம் ஒரு களியாட்ட அம்சம் எப்போதும் உள்ளது,அது ஒரு பழங்குடித்தன்மையும்கூட! மற்ற 'உயர் ' சாதியினரின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தை ,ஒழுங்குகளை, பாவனைகளை இந்த களியாட்டம் மூலம் அவர்கள் நக்கல் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ' முற்போக்கு ' இலக்கியத்தால் காட்டப்பட்டது போல ' அழுவாச்சி ' யால் நிரம்பியது அல்ல .அது ஒரு களியாட்டவெளியும் கூட.நோயும் வறுமையும் அதை தகர்ப்பதில்லை. இந்த அம்சம் பூமணியின் படைப்புக்ளில் சுத்தமாக காணப்படுவது இல்லை.இந்த அம்சத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் சோ. தருமனின் காடுவெட்டி முத்தையா [தூர்வை].அவனது 'இங்கிலீசும் ' அவன் போடும் அவசர அடிமுறை பிரகடனங்களும் எல்லாமே ஒரு வகை சாதிய எதிர்ப்புகளும் கூடத்தான்.

பூமணி திரைப்படம் பக்கமாக சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. அவரது இலக்கிய பங்களிப்பு முழுமையடைந்து விட்டது ,அவரது இடைவெளிகளை நிரப்பும் அடுத்த கட்ட படைப்பாளிகள் வந்து விட்டார்கள் என்பவர்களும் உண்டு. வெங்கட் சாமிநாதன் மகன் திருமணத்தில் நான் அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரமே மீண்டும் தன் இலக்கிய பிரவேசம் அமையுமென்றும் சொன்னார்.புதிய தளங்களுக்கு நகர்ந்துவிட்ட பூமணியை எதிர்பார்க்கிறேன்.
***
நன்றி: திண்ணை

No comments:

Post a Comment